Saturday, September 1, 2007

கலக்...கலக்...கானிஸ்பே!!!!


மேப்பிள்மரக் காட்டுக்குள்ளே
மெய்சிலிர்க்கும் கூட்டுக்குள்ளே
பூப்பூவாய்ப் போட்டுக்கிட்ட
பொன்னழகு டெண்டுக்குள்ளே

ஆப்பிள் விதைச் சொகுசாக
அடுக்கு மல்லிச் சிரிப்பாக
தோப்புக் குயில் பாட்டாக
தொடர்ந்ததொரு கொண்டாட்டம்

ராப்பகலா ஆசைப்பட்டு
ரசனையோடு திட்டமிட்டு
ஆப்புவச்ச மழையக்கூட
அலட்சியமா ஒதுக்கிவிட்டு

மாப்பிள்ளையின் விருந்தாக
மரத்தடியின் பார்-பீ-க்யூ
சாப்பாட்டை வெட்டிக்கிட்டு
சந்தோசக் கொண்டாட்டம்

ஏரியோரக் குளியல்போட்டு
ஏரிக்குள்ளே படகுவிட்டு
வாரிவாரிக் குடிச்சாலும்
வத்தாத அழகையெலாம்

வாரம்பல தங்கினாலும்
வாராத சுகத்தையெலாம்
வாரயிறுதி ஒருநாளில்
வாரிக்கிட்ட கொண்டாடம்

பச்சைப்பசும் மரங்களோடு
பாட்டுப்பாடி கைகோத்து
உச்சிவெயில் வேளையிலும்
ஓடிவரும் தென்றலோடு

கொட்டுகின்ற அருவிதனில்
கும்மாளக் குளியல்போட்டு
மட்டற்ற மகிழ்ச்சியிலே
மத்தாப்புக் கொண்டாட்டம்

கொண்டாட்டம் கொண்டாட்டமென
கோடிகவி எழுதினாலும்
கொண்டாடிய உள்ளங்களின்
குதூகலத்தைச் சொல்லிவைக்க

உண்டான சொல்லென்று
ஓர்சொல்லும் கிடையாது
கொண்டாடித் திண்டாடிக்
கொண்டோமொரு கொண்டாட்டம்

அதிகாலை மூணரைக்கே
அவசரமாய்ப் புறப்பட்டோம்
மதி குளிரும் இளங்காலை
மலர் விரித்து வரவேற்க

ஒரில்லியா டிம்ஹார்டன்
ஒன்றினிலே ஒதுங்கினோம்
ஒருகுவளை 'டீ'பருகி
உடன்வந்தோம் கானிஸ்பே

கானிஸ்பே முகாமுக்குள்
காலெடுத்து வைத்தவுடன்
தேன்மதுவில் விழுந்ததுபோல்
தேகமெல்லாம் தித்திப்பு

மானினமும் மீனினமும்
மேப்பிள்இலைத் தோரணமும்
தோணியோட்டும் ஏரியோடு
தெவிட்டாத சுகங்களிங்கே

அல்கான்கொய்ன்..என்கின்ற
அழகுபெருந் தோட்டமதில்
இல்லாத சுகங்கள்பல
இறைந்தெங்கும தான்கிடக்க

மெல்லயாம் ஊர்ந்தபோது
மேய்ந்துநின்ற மூஸ்கூட
சொல்லியதாய்ச் சிலிர்த்தோமே
சுகமாக சலாமலைக்கும்

மீண்டுவர மனமில்லாமல்
மிகுந்தசுகம் தந்தபயணம்
மீண்டுவந்த போதுநெஞ்சில்
மெத்தையிட்டுக் கொண்டதடா

வேண்டும்பல இதுபோலென
வேண்டிநிற்கும் போதினிலே
வேண்டிவந்த யாவருக்கும்
நன்றிகூறி நிற்கிறேன்

நாலுமாதம் முன்பொருநாள்
நான்நீயென முந்திக்கொண்டு
ஏழுயெட்டு குடும்பமாக
எல்லோரும் பேர்கொடுத்து

நாளும்மெல்ல நெருங்கவர
நழுவினரே பலருமதில்
தோள்கொடுத்துத் தூக்கிநின்ற
தோழரவர் ரஃபிக்கு நன்றி

ஆறேழு வருடங்களாய்
அங்குமிங்கும் என்றுபல
ஊரெல்லாம் முகாமிட்டு
உறுதிபெற்ற கலிபுல்லா

தேர்போன்ற வாகனத்தில்
துணையாக வந்ததனால்
சீர்பெற்ற செய்திகளைச்
சொல்லித்தான் மாளுமோ

சாலைகளில் மட்டுமன்றி
சமையலிலும் முதல்வராக
மாலைமழை வேளையிலும்
மின்னல்இடி போதினிலும்

வேலையென்று எண்ணாமல்
விருந்தளித்த வெற்றிமகன்
வாழைபோன்ற தாய்மனமே
வாழ்கவே வாழ்க நன்றி

சொல்லெல்லாம் சிரிப்பாக
சோர்ந்தமன மருந்தாக
சொல்லவொரு அண்ணியாக
சுத்தத்தின் தேடலாக

அள்ளியள்ளி ஓயாமல்
அழுக்ககற்றிக் கேம்பினையே
முல்லையாய் வைத்திருந்த
ரஹ்மத்து அண்ணி நன்றி

கேட்டதென்னவோ இவரிடம்
ஆட்டுக்கறி வறுவல்தான்
கேட்காத பலவும் செய்து
காட்டிவிட்டார் இவர்மனதை

கூட்டத்தை வேருடனே
கொள்ளைகொண்ட சேவை
மீட்டாத வீணைபோன்ற
மென்மை ரம்சான் நன்றி

என்மனமோ உயரத்தில்
என்னுயிரோ பரவசத்தில்
இன்னுமின்னும் இதுபோன்ற
இனிப்பான அனைவருக்கும்

என்னுடைய நன்றிகளை
இனிதாகச் சொல்லுகிறேன்
என்னுடனே முகாம் வந்த
எல்லோர்க்கும் நன்றிநன்றி

அன்புடன்...புகாரி

சொல்லிவிடவா

என்
நெஞ்சக் கூட்டுக்குள்
படபடவென
சிறகடித்துத் துடிக்கும் கிளிகள்
என்ன சொல்லித்
துடிக்கின்றன என்று

அன்பே
உன்னிடம் நான்
சொல்லிவிடவா

உன்
கருவண்டுக் கண்களுக்குள்
அவ்வப்போது
ஒரு
பனிபடர்ந்தமுகம்
அரும்பு விட்டுப்
பூப்பதைப் பார்க்கிறேன்.

கேட்டுவிடவா
அது
என் முகம்தானே என்று.

உன்
கன்னங்களில் சிவந்து
கழுத்துவரை கரைந்து விழும்
வெட்க நிலாக்களில்
ஒரு
தெளிவில்லாத
முகவரி பார்க்கிறேன்.

கேட்டுவிடவா
அது
என் முகவரிதானே என்று

உன்
மாபெரும் மைவிழிகள்
என்
மனவெளியைப் படுத்தும் பாடு

அப்பப்பா
சொல்லவொண்ணாத் தவிப்பு
அன்பே
உன் புன்னகைகள்
என் கனவுகளில் பொழியும்
பொன்மழையைச் சொன்னால்.

கேட்டு மகிழ்வாயா
அன்பே

ஜென்மங்களில்
நம்பிக்கை உண்டா உனக்கு
எனக்குக் கிடையாது

இருப்பினும்
அது
இருக்க வேண்டுமென
இன்று ஆசைப் படுகிறேன்

என்
வார்த்தைக் குஞ்சுகளை
இன்று நான்
அடைத்து வைத்தாலும்

அவற்றை
நம்
மறு ஜென்மத்திலாவது
ஆசையாய்த்
திறந்து விடலாமல்லவா

அன்புடன்..புகாரி

நம்ம ஊரு நயாகராவே

பட்டுப் பட்டென்று
தலையில்
கொட்டிக் கொட்டி
உள்ளத்தில்
கெட்டிமேளம் அடிப்பது
உன் தண்ணீர்க் கரங்களா

கைகள் கட்டிக்கொள்ள
கால்கள் ஒட்டிக்கொள்ள
தரிகிடதோம் ஆடவைப்பது
உன்
சிலீர்ச் சந்தங்களா

யார் நீ
அதோ அந்த
நிலாவிலிருந்து கசிந்துவரும்
வெள்ளிச் சரமா

அல்லது
வானவில்லிலிருந்து
நழுவி விழும்
ஒற்றை வர்ணமா

அப்பப்பா
இத்தனை பேரையும்
மொத்தமாய் முத்தமிட
உனக்கே சாத்தியம்

நீ
கொட்டுவதோ கோபமாய்
ஆனால்
இத்தனைக் குளிர்ச்சியாய்
ஒரு கோபத்தை நான்
வேறெங்கு காண

என் காதலியின் ஊடலிலா

அன்புடன்...புகாரி

கவிதைகள்...மழையென..!!!

இருட்டு..பேசுகிறேன்

நான் இருட்டு
கொஞ்சம் ஊடுருவிப் பாருங்கள்
நானே நிஜம்
வெளிச்சம் விருந்தாளி
நானே நிரந்தரம்

புலன்கள் ஐந்து
அவற்றுள் ஒற்றைப்புலனே
வெளிச்சத்தின் அடிமை
அந்த விழிகளும் என்னில் மட்டுமே
கனவுகள் காண்கின்றன

கனவுகளே உங்களின்
சத்தியப் பண்புகளைச் சொல்கின்றன
உங்களின் சரியான முகவரி
உங்கள் கனவுகளில்தான்
பொறிக்கப் பட்டிருக்கிறது

வெளிச்சம் உங்களைப்
பொய்யுடன் பிணைத்துக் கட்டுகிறது
வெளிச்சம் பொய்களின் கூடாரம்
இருட்டே உண்மையின் தீர்மானத் தளம்

என்றாவது உங்களை
வெளிச்சத்தில் பார்த்திருக்கிறீர்களா
இருட்டில்தானே நீங்கள் தெரிவீர்கள்

வெளிச்சத்தில் உங்களுக்கு தினம் ஒரு முகம்
இருட்டில் உங்களுக்கு ஒரே முகம்

வெளிச்சத்தில் நாளும் நிறம்மாறுகிறீர்கள்
இருட்டில்தான் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்

வெளிச்சம் பொய் இருட்டே நிஜம்

வெளிச்சம் துயரம்
இருட்டே சந்தோஷம்
வெளிச்சம் அரக்கன்
இருட்டே உங்கள் தாய்

நிறைய அழுகை மனிதனுக்குச் சொந்தம்
அவை அனைத்தும் வெளிச்சம்
உங்களுக்குத் தந்த விசங்கள்

அத்தனைக் கண்ணீரையும் கொட்டித்தீர்க்க
இருட்டே உங்களுக்கு மடி வார்க்கிறது

கரு எங்கே உதிக்கிறது
விதை எங்கே முளைக்கிறது
உயிர்கள் அத்தனைக்கும் மூலம் இருட்டுதானே

வெளிச்சம் வேசம்
வெளிச்சத்தில் சொல்லப்பட்ட கதைகள்தாம்
இருட்டை பயமென்று பிதற்றுகிறது

கருப்பையில் பயந்தீரா வெளிவந்து அழுதீரா
இருட்டா உங்களுக்குப் பயம் சொல்லித்தந்தது

வெளிச்சம் கவலைகளின் தொழிற்சாலை
இருட்டு உங்களின் சத்தியமான வாழ்க்கை
புறக்கண் என்றேனும் எவரின் நிஜத்தையும்
உங்களுக்குக் காட்டி இருக்கிறதா

சொல்லுங்களேன்
பாசமென்பது பெத்தவளின் முகமா
அவள் அரவணைப்பா
காதல் தந்தது காதலியின் வெளியழகா
அவள் உள்ளழகா
நிம்மதிச் சொத்து
உருவங்களாலா உள்ளங்களாலா

யோசித்துப் பாருங்கள்
இருட்டையே நீங்கள் காதலிக்கிறீர்கள்
வெளிச்சத்தை வெறுக்கிறீர்கள்
வெளிச்சம் இதயத்தை மதிப்பதில்லை
இருட்டு உருவத்தை மதிப்பதில்லை

தினம் தினம் வெளிச்சம்
உங்களை ஏமாற்றுகிறது

தவறாக எண்ணாதீர்கள்
இருட்டு வெளிச்சத்தைக் கண்டு
ஓடி ஒளிவதில்லை
வெளிச்சத்துக்கும் வாழ்க்கை தருகிறது
வெளிச்சம் இல்லாமல் இருட்டு இருக்கும்
இருட்டே இல்லாமல்
வெளிச்சம் எங்கே இருக்கும்

பூமி இருட்டு
நிலா இருட்டு
கோள்களெல்லாம் இருட்டு
பிரபஞ்சமே இருட்டு
உயிர்கள் அத்தனையும் இருட்டின் துகள்கள்
இருட்டே நிஜம் வெளிச்சம் பொய்


சுனாமி வேட்கை

மனம் பறிகொடுத்து
மணிக்கணக்காய் ரசிக்கும் மக்கள்
இன்று உயிர் பறிகொடுத்து
அலை பார்க்க நேர்ந்தது

படுத்துக்கிடக்கும்போதே
பயமாய் இருக்கும்
கடல், எழுந்து நின்றால்
என்னாவது

கரைகளிலெல்லாம்
கண்ணீர்
ஓரங்களிலெல்லாம்
ஓலம்

சிப்பிகளுக்கெல்லாம்
முத்து வழங்கும் கடல்
உயிர் முத்துக்களை
அபகரித்துக்கொண்டு
மனித உடல்களை
வெற்றுச் சிப்பிகளாக்கி
விசிறியடித்துவிட்டது

தன்னிடம் வந்து
உழைப்பைக் கொட்டிய
மீனவ உயிர்களை
கட்டாய ஓய்வு கொடுத்து
பிணங்களாய்
ஊருக்குள் கொண்டுவந்து
கொட்டிவிட்டுப் போய்விட்டது

பாவம்...
கடல் என்ன செய்யும்
நிலநடுக்கத்தின்
பினாமிதானே இந்தச் சுனாமி

கடலின் இடுப்பை
நிலம் ஒடிக்க ஒடிக்க
கதறிக்கொண்டு வந்த
ஒப்பாரிதானே இந்தச் சுனாமி

தன் கோடிக் கரங்களால்
வெறிகொண்டமட்டும்
கரைகளைப் பிறாண்டியபோது
கணக்கற்ற உயிர்கள்
கிழிந்து உதிர்ந்தன

எனக்கொன்றும் தெரியாது
நான் குற்றமற்றவளென்று
நிலத்தின் மடிகளிலேயே
சடலங்களை வீசிவிட்டு
சடுதியில் ஓடிவிட்டது கடல்

பூமிக்கு
இது வெறும் நடுக்கமல்ல
மல்யுத்தத்தில்
மரணஅடி பட்ட நிலை

நாடுகளெல்லாம்
நகர்ந்துபோய்விட்டன
தாழ்ந்தும் உயர்ந்தும்
நிலைகுலைந்துவிட்டன

பூமிக்கோள்
தன் அச்சிலிருந்து
சடக்கென்று வழுக்கி
விலகிப்போய்விட்டது

பூமியைச் சொல்லியும்
குற்றமில்லை
இவையெல்லாம்
வானத்தின் லீலைகள்

மனிதனின் சக்தி
எப்போது
வானத்தை வளைக்கும்?

நாச வேலைகளை
உதறியெறிந்துவிட்டு
எப்போது மனிதன்
முழுமையாய்த் தன்னை
அதில் நுழைப்பான்?

அதுவரைக்கும் ஆளாளுக்கு
ஆயுள் கணக்குப் போடாதீர்கள்

நிரந்தரமென்று எதுவுமில்லை
என்ற நிரந்தரத்துக்குள்
முடங்குங்கள்

நான்தான் வேண்டும் எனக்கு

அன்பே

நீ
கேட்டதைவிடக்
கூடுதலாய்த்தானே கொடுத்தேன்
நீ கேட்காததையும்
நானே கண்டுபிடித்துச் சேர்த்து

நீ
சொன்னதையெல்லாம்
சுத்த நெய்யினால்
சுடப்பட்ட நிஜங்கள்
என்றுதானே நம்பினேன்

காதல்
வெறும் வாய் வித்தையல்ல
செயல்
என்று நான்
நிரூபிக்காத நாளுண்டா

நிறுத்தாத பேச்சும்
நிமிடத்திற்கொரு முத்தமுமென
சுவர்க்க மத்தியில்தானே
மனங்கள் மணக்க மணக்க
மல்லாந்து கிடந்தோம்

உன் கண்களுக்குள் புகுந்து
வண்ண வண்ணக் கனவுகளை
விசாரித்து விசாரித்து
அத்தனையையும் நான்
உண்மையாக்கித்தானே
நிமிர்ந்தேன்

என்னைப் பார்த்தேன் என்று
நான்
உன்னைப் பார்த்துத்தானே
சொன்னேன்

ஆழமும் அழுத்தமும்
காதலின் முத்திரைகள் என்று
உறங்காத கடலாய்க் கிடந்துதானே
உன்முன் அலைகள் தொடுத்தேன்

இன்று ஏன் என்னை
ஒன்றுமில்லாதவனாக்கிவிட்டாய்

நீயே வலியவந்து இழுத்த தேரை
ஏன் திராவகத் தீயில்
செலுத்தினாய்

உன்
இடறிய தேவைகள்
நம் காதலைக் கொன்றனவா

நீயும் நானும் காதலிக்க
ஒரு கோடி காரணங்கள் சொன்னாய்
பிரிவதற்கு மட்டும்
ஒரே ஒரு காரணம்தானே சொன்னாய்
அதுவும் உப்பு சப்பில்லாமல்

இறுதியாய்

என்
உயர்காதல் விழிநோக்கும்
உரங்கெட்டுத் தலைதாழ்த்தி
நரக உதடுகள் நச்சு இழைகளாய்
ஒட்டி ஒட்டிப் பிரிய

ஒப்புக்கு நீயோர்
மன்னிப்பு கேட்டதை
புரியாத மூடனல்ல நான்
இருந்தும் அழுது நிற்கிறேன்

நீயும் நானும் ஆடிய ஆட்டங்களில்
இதய அணுக்கள் தேயத் தேய
நிஜமாய் நின்றவனாயிற்றே நான்

மௌனங்கள் பூட்டி
உதடுகள் ஒட்டி
உள்ளம் திரிந்து நிற்கும் உன்னிடம்
இனி நான் என்ன கேட்பது

உன்னை இழந்தேன் என்பதை நான்
நம்பமறுத்தாலும்

தொடர்ந்து என்னை
என்னாலேயே
ஏமாற்றிக்கொள்ள இயலாததால்
இன்று நான்
ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறேன்

கண்ணீர்க் கரைகளில்
மெல்ல மெல்ல என் எண்ணங்கள்
மேலே மேலே எழுகின்றன

என் பிரியமான பாவியே
நிலைக்கத் தெம்பில்லா
நெஞ்சம் கொண்ட
உன்னை மட்டுமா நான் இழந்தேன்

மென்மையும் உண்மையும்
குழைத்துக்கட்டிய
சிம்மாசனத்தில் வீற்றிருந்த
என்னையுமல்லவா இழந்துவிட்டேன்
.

ஆம்
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு

தண்டவாளங்கள் நீளமானவை
அடுத்த ரயிலுக்கு இன்னும்
ஐந்து நிமிடங்கள் என்று
அறிவிப்புகளும் வருகின்றன

கடந்துவிட்ட ரயிலுக்கும்
கைவிட்ட காதலுக்கும்
வருந்தித் துருப்பிடித்துச் சாவது
ஒருக்காலும் உசிதமல்ல

நானும் போய்
காத்திருக்க வேண்டும்

எனவே
என் பிரியக் காதலியே
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு


தமிழ்

இந்தக் கவிதைக்கு ஒரு தனி நடைச்சிறப்பு இருக்கிறது. முதல் இரு அடிகளையும் கவனியுங்கள். 'இதயம்' என்று துவங்கி 'மொழி' என்று முடிகிறது. பின் 'தமிழ்' என்ற உயிர்ச் சொல்லைத் தனிச் சொல்லாக நிறுத்திவிட்டு, பின் 'மொழி' என்னும் சொல்லிலேயே துவங்கி 'இதயம்' என்ற சொல்லுக்கு வந்து ஒரு முழு சுற்றினையும் ஆனந்தமாய் நிறைவு செய்கிறது. இதே போலவே இக்கவிதை முழுவதும் தமிழைப் போற்றிப் பாடும் இக்கவிதையைத் தமிழ்த்தாய் புன்னகையோடு தன் கூந்தலில் சூடிக்கொள்வாள்...

இதயத்தில் இனிக்கின்ற மொழி - தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற இதயம்

கவிதைக்குள் விளைகின்ற வைரம் - தமிழ்
வைரத்துள் ஒளிர்கின்ற கவிதை

விரலுக்குள் ஊறிவரும் எழுத்து - தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற விரல்

ஓசைக்குள் கூடுகட்டும் சுகம் - தமிழ்
சுகங்களில் வெடிக்கின்ற ஓசை

காற்றுக்குள் சிறகோட்டும் வாசம் - தமிழ்
வாசத்தால் எழுந்தாடும் காற்று

பார்வைக்குள் விரிகின்ற வானம் - தமிழ்
வானத்துள் மிளிர்கின்ற பார்வை

மண்ணுக்குள் கருவான வளம் - தமிழ்
வளத்தினில் கொழிக்கின்ற மண்

இயற்கைக்குள் முத்தாடும் மழை - தமிழ்
மழையினில் தழைக்கின்ற இயற்கை

மனசுக்குள் எழுகின்ற உணர்வு - தமிழ்
உணர்வினுள் கசிகின்ற மனசு

மூச்சுக்குள் உள்ளாடும் தாகம் - தமிழ்
தாகத்தில் தீயாகும் மூச்சு

மோகத்துள் கமழ்கின்ற இளமை - தமிழ்
இளமையில் திரள்கின்ற மோகம்

முயற்சிக்குள் முளைவிடும் சிறகு - தமிழ்
சிறகினில் தெறிக்கின்ற முயற்சி

மனிதத்துள் செழித்தோங்கும் கருணை - தமிழ்
கருணையால் வேர்பாயும் மனிதம்

உயிருக்குள் குடிகொண்ட மானம் - தமிழ்
மானத்தில் துடிக்கின்ற உயிர்

தீபத்துள் வாழ்கின்ற புனிதம் - தமிழ்
புனிதத்தில் நிமிர்கின்ற தீபம்

தமிழ்த்தாய் வாழ்த்து

விற்பனர்க்கும் அற்புதமே
முற்றுமுதற் கற்பகமே
சிற்றருவிச் சொற்பதமே
சுற்றுலக முற்றுகையே
வெற்றிநிறை கற்றறிவே
நெற்றிவளர் பொற்றழலே
உற்றதுணை பெற்றுயர
பற்றுகிறேன் நற்றமிழே


சரணமென்றேன்

அலையலையாய் வீசுதடி
ஞாபகங்கள் உன்
தலைமுடிக்குள் நழுவுதடி
யோசனைகள்

துளைவழியே ஊதுதடி
உயிரிதழ்கள் உன்
துணைகேட்டுப் பாடுதடி
காற்றலைகள்

பழையதயிர் மதமதப்பில்
கன்னவில்லை அதில்
போனஉயிர் போனதுதான்
மீளவில்லை

தலைகொதித்தே வெடித்தாலும்
விடுவதில்லை உன்
தீயிதழால் நீவிரிக்கும்
முத்தவலை

நிலைகுலைக்கும் நீள்விழியின்
ஒயிலாட்டம் என்
நெஞ்சடுப்பில் எனைத்தள்ளும்
புயலாட்டம்

கலைகொழிக்கும் இடைதொட்டுத்
திண்டாட்டம் என்
காலமெல்லாம் காணவேண்டும்
கொண்டாட்டம்

மழைவிழுந்த மண்வீசும்
வாசனைபோல் என்
மனமெங்கும் நீவிழுந்த
வாசமடி

குலைகுலையாய்ச் சரிந்துநிற்கும்
வாழையடி உன்
கோலங்கண்ட காய்ந்தநதி
ஊறுதடி

பள்ளங்களோ
வளர்நாளில் ஏராளம் உன்
பனிதூவும் புன்னகையால்
மேடாகும்

நில்லுங்கள் ராசாவே
என்றழைத்து இடும்
நெற்றிமுத்தம் துயர்வேரைக்
கொன்றழிக்கும்

வள்ளலுனை வாழ்வினிலே
கண்டுவிட்டேன் என்
வாய்க்காலில் கங்கைவளம்
கொண்டுவிட்டேன்

உள்ளங்கை நடுவிலுனை
உறங்கவைத்தே என்
உயிர்மூச்சுக் காற்றாலே
உனைக்காப்பேன்

மேகமொட்டு மலைமுகட்டில்
ஓய்வதுபோல் என்
மார்மீது மதுசொட்டச்
சாய்கின்றாய்

தேகமெல்லாம் எலும்பழியக்
குழையுதடி உயிர்
திரவத்தோடு திரவமென்று
வழியுதடி

நாகமணித் தேரிழுத்து
ஓடிவந்தேன் நீ
நாணமுடன் காலெடுத்து
ஏறிக்கொண்டாய்

சோகங்களைக் கொத்தாகத்
தீயிலிட்டாய் உன்
சொந்தமென்று சொல்லியெனை
உயிரிலிட்டாய்

பயிரழிந்து பட்டுப்போன
பாழ்நிலத்தில் புதுப்
பசுமையேற்றிப் பரிவோடு
ஏருழுதாய்

உயிரெடுத்து உயிருக்குள்
ஊட்டுகின்றாய் என்
உயிர்த்துடிப்பை எனக்கே நீ
காட்டுகின்றாய்

கயிறிழுக்கும் போட்டியுள்ளே
நடக்குதடி என்
கர்வமெல்லாம் பெண்மையிடம்
தோற்குதடி

சுயநினைவில் உயிலொன்று
எழுதுகின்றேன் உன்
சொர்க்கவிழிச் சிறையொன்றே
சரணமென்றேன்

உயிர் மலரும்

மழை பொழிய பொன்
மழை பொழிய
மனம் நனையும் என்
மனம் நனையும்

மனம் நனைய என்
மனம் நனைய
முகம் தெரியும் உன்
முகம் தெரியும்

முகம் தெரிய உன்
முகம் தெரிய
உயிர் மலரும் என்
உயிர் மலரும்

அன்புடன்..புகாரி

வாழ்க்கை நாடகசபா

ஒரு நாடகம் தொடங்கியது
மேடையிலல்ல; என்னைச்சுற்றி

என்னைப்
பொறியிலடைத்துத் தூக்க
உறவுகளால் ஒரு தத்ரூப நாடகம்

புரிந்துபோனதும்
புதிராய்த்தான் உதிர்ந்தேன்
முதலில்

பிறகு...
நானும் கலந்துகொண்டேன்
ஆவலும் அவசியமும் உந்த

நானும் நடிக்கிறேன் என்று
அந்த நடிகர்களுக்குத் தெரியாது
என் பாத்திரத்தின் கதை வசனம்
அவர்கள் அறியாதது

இதனுள் என்னைப்போல்
இன்னும் எத்தனைபேர்
எத்தனை அரிதார முகங்களுடன்
நடிக்கிறார்களோ தெரியாது

ஒரு சிலரைக் காணும்போது
இவர்கள் இன்று நடிப்பதாய்த்
தெரியவில்லையே என்று
நானே வியக்கும் அளவுக்கு
அத்தனை இயல்பாய் நடிக்கிறார்கள்

இதில் நானும் நடிக்கிறேன் என்று
அறிய முடியாத முட்டாள்கள்
அவர்கள் என்று நான் நினைத்தால்
நான்தான் முட்டாளோ
என்று தோன்றுகிறது

அடுத்த காட்சி எனக்கு வேறாகவும்
அவர்களுக்கு வேறாகவும் இருப்பதால்
இந்தப் பல்முனை நாடகத்தில்
அடிக்கடி வசனங்களை மாற்றிக்கொண்டே
இருக்க வேண்டியதாய் இருக்கிறது

எல்லோரும் கைதேர்ந்த
வசனகர்த்தாக்களாய்
வளர்ந்துகொண்டிருக்கிறார்கள்
காட்சிகளை அருமையாய்
அரை நொடியில் திட்டமிட்டு
அப்போதே அரங்கேற்றுகிறார்கள்

திறமையற்றவர்களெல்லாம்
சில காட்சிகளிலேயே
விடைபெற்றுக்கொள்கிறார்கள்

என்றாலும்
இந்த நாடகத்தின் முடிவு
எவருக்குமே தெரியவில்லை

இந்த நாடகம்
முடிவடையாது என்றும்
புரிந்துபோய்விட்டது

சுயங்கள் கழன்றுவிழுந்து
நடிப்பே சுயங்களாகிப் போயின
மெல்ல மெல்ல

வாழ்வது எப்போது என்றுதான்
எவருக்குமே தெரியவில்லை

அன்புடன் புகாரி

பட்டாம்பூச்சி

வெறுமனே ஒரு
செத்த புழுவாய்த்தானே
வெளியேறியது
ஓர் அரை நொடிக்கு முன்

இறக்கை
எப்படி முளைத்தது
வர்ணங்கள்
எப்படி வந்தன இப்போது

அடடா...
வெற்றித் திலகங்களை
நெற்றியில் அணிந்து
வெளியேற்றியவனிடமே
விரைந்து வந்து நின்று
என்னமாய்ச்
சிறகடித்துப் பறக்கிறது
இந்தப்
பொய்யெனும் பட்டாம்பூச்சி

அன்புடன்...புகாரி

ஈரச்சுவை

காதல்விழி ஓரச்சுவை
கையணைவில் சேரச்சுவை
கவிதைகளில் ஊறச்சுவை
கனிந்தசொல் வாரச்சுவை

கனவுகளில் ஏறச்சுவை
நினைவுகளைக் கீறச்சுவை
நெஞ்சுக்குள் பாரச்சுவை
நிம்மதிக்குள் மாறச்சுவை

வஞ்சகத்தைச் சீறச்சுவை
வெறுப்புமனம் தீரச்சுவை
உறவுகளில் தூரச்சுவை
உடைந்தமனம் தேறச்சுவை

மதவட்டம் மீறச்சுவை
மனிதநேயம் வீரச்சுவை
இனியசொல் கூறச்சுவை
இதயந்தான் ஈரச்சுவை

அன்புடன்...புகாரி

உன் குரல்

கடுந்தாகச் செவிவிழுந்து
நடுநாசி முற்றமேறி

கனவுக் கனல்வீசித்
தீய்ந்த என் விழிகளுக்குள்
தமிழமுதாய்ச் சிதறி

நாவடித் தேனூற்றுகளை
அதிரடியாய் உடைத்து

பட்டமரத் தேகமெங்கும்
பனிப்புல்லாய்ச் சிலிர்த்து

துயர் மேயும் இதயத்தின்
திறவாக் குகைக்குள்ளும்
தித்திப்புக் கனிரசமாய்
இறங்கி

வளர்முத்த வெறிகொட்டும்
உயிர் வெள்ள நயாகரா

அன்புடன் புகாரி

கணிவழிக் கிளிவதை

இணையச் சாளரங்களில்
கணினிச் சொடுக்குகளால்
ஜிமெயில் பிளந்து
மின் துடிப்புகளுக்கிடையில்
கண் துடித்தேன்

வெற்றுகள் கூடி
துக்கம் விசாரிக்க
என் விழியே
என் விழி பார்த்துக் கேட்கிறது

"எங்கே என் கணிக்குயில்?"

வலைப்பூ வனப்பாய்
விழுதுகள் பரப்பி
கிளைத்து வளர்கின்றன
உயிர் இணையத்தில்
பசும் பொல்லா நினைவுகள்

வாலறுந்த கணியெலிபோல்
அவளின் உணர்வுக் கணிக்குள்
எதைச் சொடுக்கவும்
வழியற்று வலிபெற்று நான்

யுனித்தமிழ்ச் சொல்தேடும்
கூகுள் எந்திரம் போல்
கடுவிழியலைந்து தவிக்கிறேன்
கூட்டுக்குள் அடையா ஏக்கங்களோடு
என் மூச்சானவள் மனம் தேடி

மௌனமும் அல்லாத
பேச்சும் அல்லாத
இடைப்பட்ட மொழியில்
வினோதமாய்ப் புதிர்கிறாள்
நாளும் பொழுதும் இவள்

மௌனமெனில்
நம்பிக்கைத் திசையில்
அவளை என் விருப்பம்போல்
நகர்த்திக்கொள்வேன்

பேச்செனில்
இதுதான் இவளென்று
வெள்ளைத்தாள் எழுதி
உறுதியாவது செய்து கொள்வேன்

மௌனமுமல்லாத பேச்சுமல்லாத
இவளின் முட்பூ முத்தம்
உயிரின் உள்ளுதடுகளையும்
கிழிக்கின்றது

அதன் மூர்க்க வாசம்
அணுக்கள் ஒவ்வொன்றையும்
இரண்டிரண்டாய்ப்
பிளந்தெடுத்துக்கொண்டே
ஓய மறுக்கின்றது

கண்ட்ரோல்+ஆல்டர்+டெலீட்டால்
பில்கேட்சின் பிழைகளைச்
சரி செய்வதைப்போல
இவ்வதைகளையும் சரிசெய்ய
நெஞ்சப் பொறிக்குள்ளும்
பொத்தான்கள் இல்லையா?

காணத்துடிக்கும் உயிரோடு
என் உயிருக்கு
இந்த உயிர் மடலும்
விரைந்து போய்ச் சேரட்டும்

திறக்கப்படாத
திறந்தாலும் வாசிக்கப்படாமல்
அழித்தல் பொத்தானால்
தூக்கிலிடப்படும்
அவளின் மின்னஞ்சல்
வருகைப் பெட்டிக்குள்

அன்புடன்...புகாரி

வளைகுடா விமானம்

விமானம் மேலே மேலே
ஏறிக்கொண்டிருந்தது
மனசு கீழே கீழே
விழுந்துகொண்டிருந்தது

கைக்குழந்தையுடன்
விமான நிலையத்தில்
இன்னும் கையசைத்துக்
கொண்டிருக்கிறாள்
மனைவி

அன்புடன் புகாரி

புன்னகை

தேக மரத்தின்
வதனக் கிளையில்
மொட்டு உதட்டின்
புன்னகை

அடடா
பூமியில் பிறக்கும்
தேவதை நீயோ
பூக்களும் செய்யும்
அர்ச்சனை

கன்னியர் கண்ணில்
கவிதைக் கீற்றாய்
மின்னலடிக்கும்
புன்னகை

அவளின்
உள்ளக் கள்வன்
பெயரைச் சொல்ல
புன்னகை பூக்கும்
புன்னகை

விலைமகள் இதழில்
வாணிபப் புன்னகை
வேதனைக் காம்பினில்
சுழலும்

அவளின்
நிலைதனைக் கூறும்
தகவல் பலகை
உயிரை அறுக்கும்
அவலம்

வாழ்க்கை ஊஞ்சலில்
ஆடிடும் இளமை
பூத்துக் குலுங்கும்
புன்னகை

இரவில்
தூங்கிய பூமியை
எழுப்பும் சூரியன்
விடியலாய் விரிக்கும்
புன்னகை

வாங்கிய கடனைக்
கொடுத்தவன் வந்தால்
வட்டிக்கு உதிரும்
புன்னகை

பொழுதும்
வறுமைக் கலைஞன்
உதட்டில் கூட
வறண்டு உடையும்
புன்னகை

உழைக்கும் மக்கள்
உதட்டில் புதைந்து
உயிரை இழக்கும்
புன்னகை

அதனைப்
பிழைக்க வைக்கக்
குரல்கள் நீட்டும்
புரட்சிக் கருத்தின்
புன்னகை

மெய்யோ பொய்யோ
புன்னகை சிந்து
பொய்கள் விலகும்
தோற்று

புவியில்
அய்யோ துயரம்
போர்கள் போதும்
புன்னகை ரத்தம்
ஏற்று

அன்புடன்...புகாரி

ஆடுகளக்கோடுகள்

ஓர் கால்பந்தாட்டத்தில்
என் கண்ணாடவிட்டேன்

மைதானச் சுறுசுறுப்பால்
வியப்பு மூளையிலாட
உதைபடும் பந்தால்
பரிதாபம் மனதிலாடியது

காலங்காலமாய்ப் பின்னப்பட்டு
பந்தின் எல்லைக்கோடுகள்
திட்டவட்டமாகவே
வரையறுக்கப்பட்டிருந்த
விளையாட்டில்...
கோட்டைத் தாண்டவிடாமல்
தரைக்கும் வானுக்குமாய்
புழுதி பறக்க பந்தைத்
பின்னியெடுத்துக் கொண்டிருந்தார்கள்
விழுந்து விழுந்து விளையாடி
வலுப்பெற்ற அனுபவ வீரர்கள்

பாவம்
புத்தம்புதுப் பந்து

உள்காற்று இருக்கும்வரை
வெளியேற வழியற்று
மேனியெங்கும் ரத்தக்கோடுகள்

ஆர்வத்தோடு
பார்த்துக்கொண்டிருந்த
ரசிகர் கூட்டம்
தடுப்பவனைத் தாண்டி
கோட்டைக் கடந்து
பந்து
வெளியில் விழுந்து
ஓர் சிறு பொழுது சொகுசாய்ச்
சொர்க்க அமைதி கண்டபோதுதான்
உற்சாக மிகுதியால்
கைதட்டிக் கைதட்டி
உட்காதையும் பிளந்தார்கள்

அன்புடன்..புகாரி

காப்பாற்று கிளியே

அற்புதச் சிற்பவிழி
பூஞ் சிற்றிடைப் பேரெழிலி

கற்பனைச் சிற்பியின்
முற்றிய நற்றமிழ்
ஏற்றிய தீபவொளி
எனைச் சுற்றிவா சிற்றருவி

சந்தனத்தில் நீராடி
நந்தவனப் பூச்சூடி
வந்துநிற்கும் என்தேவி
என் உயிரின் உயிரும் நீதான்டி

காலைப்பனி ஈரத்திலே
சேலைவனப் பூந்தளிரே
வாழையாய் நீயசைய
உயிரைக் கிள்ளுதடி
உன்னை
மாலையாய் அள்ளியணிய
கைகள் துள்ளுதடி

ஊருறங்கும் நேரத்திலே
யாருமற்றத் தீவினிலே
போர் தொடுக்கும்
உந்தன் நினைவில்
தீயாகிப்போனேன்
என்னைக்
கார் கூந்தல் மழை பொழிந்து
காப்பாற்று கிளியே

அன்புடன் புகாரி

எனக்கொன்றும் பிடிக்கவில்லை

எனக்கொன்றும் பிடிக்கவில்லை
ஆமாம் ஆமாம் எனக்கொன்றும்
பிடிக்கவில்லை
தொட்டதெலாம் தட்டிவிடும்
அறிவின் இந்தத் தொல்லையொன்றும்
பிடிக்கவில்லை

தடுப்பதெல்லாம் தப்புமில்லை
அறிவு நிதம் சொல்பவற்றுள்
உப்புமில்லை
எனக்கொன்றும் பிடிக்கவில்லை
ஐயகோ இது எனக்கொன்றும்
பிடிக்கவில்லை

அறிவுமனம் மயங்கிடாமல்
ஈர நாவில் காவியங்கள்
விளைவதுண்டோ
படிப்பறிவை மறந்திடாமல்
புதுமை பொங்கும் ஊற்றுகளும்
எழுவதுண்டோ

பட்டறிவை உணர்வென்போம்
அதனுள் உண்மை மட்டும்தான்
பிறக்கிறது
குட்டிவைக்கும் பிள்ளைகளின்
புத்தி நாளும் கோணலாகிச்
சிறுக்கிறது

அறிவு வெயில் கொளுத்தாத
சொந்த நிமிடம் ஐந்தெனக்குக்
கிடைத்தாலும்
வாழ்வென்னும் இயற்கைக்குள்
கவலை தாண்டி பொய்யற்று
வாழ்ந்திருப்பேன்

யாராரோ வீழ்ந்த காயம்
கூட்டி வைத்து எனக்குள்ளே
திணிக்கும் இந்த
அறிவெனக்குப் பிடிக்கவில்லை
அடிமை போல மண்டியிட
விருப்பமில்லை

வேண்டாத சிந்தனைகள்
வாழ்வில் எல்லாம் தவறென்றே
கூத்தாட
பிறந்தபோது எழுந்து நின்ற
இதயம் இன்று புண்ணாவது
பிடிக்கவில்லை

தினந்தோறும் நெய்யூற்றி
பாழும் இந்த மூளைமரம்
வளர்த்துவிட்ட
மனம்செத்த அறிஞர்களே
நாளும் உம்மை மனதார
சபிக்கின்றேன்

அன்புடன் புகாரி

இணையத்தோரே

தேனீர்க்கடை தாண்டி
தெருமுக்குக் கூட்டம்தாண்டி
தேதி குறித்துக் கூடும்
இலக்கிய வட்டங்கள் தாண்டி
இணையமென்ற மேற்தள மாடம் வந்து
அகம்பூக்க அமர்ந்தால்

ஐயகோ...
இங்குமா அந்தச்
சில்லறை அரசியலின்
நச்சுமுள் விளையாட்டு

ஒருவன்
இருவனாகிக் கூடும்போதே
பேயாட வந்துவிடுகிறது
பொல்லாத அரசியல்

நெஞ்சைப் பிசைந்து
உயிரைக் கரைக்கும் எழுத்தையும்
நெஞ்சாரப் பாராட்ட
நெஞ்சுகொள்ள மாட்டார் சிலர்

காரணம்...

அவரின்
அரைகுறைச் சொல்லைப்
பாராட்ட ஆளற்றுப் போனதே
அந்தச் சோகம்

தன்னைவிடத் தரமாக
எழுதித் தொலைக்கிறானே படுபாவி
அந்தப் பொறாமை

இவன் என்
எதிரி எழுத்தாளனின்
தாசனாயிற்றே
அந்த விரோதம்

இதையெல்லாம் பாராட்டிவிட்டால்
கௌரவம் என்னாவது
அந்தத் தலைக்கனம்

கண்டதுக்கும்
மறுமொழியிட்டுவிட்டால்
நாம் பணிப்பளுவால் சிக்குண்டு
தவிக்கிறோமென்று எப்படி நிரூபிப்பது
அந்தச் சாதுர்யம்

அட...
நாம் பாராட்டிவிட்டால்
நம் கண்முன்னேயே
வளர்ந்து தொலைத்துவிடுவானே
அந்த நல்லெண்ணம்

இப்படியாய்ப் பலரழிய...

நாலுவரி என்று நாம் மூச்சுவிட்டால்
நாநூறு பிழை என்ற
நம் ஆஸ்துமாவல்லவா
அறிவிக்கப்பட்டுவிடும் என்றே
இன்னும் சிலர்

இவை போதாதென்று
இந்தக்குழு அந்தக்குழு என்ற
இணையக் குழுக்களின்
தன்மானத் துவேசத்தால்
குரல்கிழியும் குற்றச்சொற்கள்
காமநோய்க் கிருமிபோல்
கணக்கற்ற பெருக்கத்தில்

சின்ன வட்டத்துக்குள்ளும்
குட்டிக் குட்டி
குண்டூசி வட்டங்கள் போடுவதையா
சுதந்திர எழுத்து சொல்லித்தருகிறது

ஆயிரம் வட்டங்களையும்
மாண்போடு உள்ளடக்கிக் கொள்ளும்
மாசறு வட்டமல்லவா எழுத்தாளன் இதயம்
அதை எங்கே தொலைத்துவிட்டு
இங்கே வந்து உப்புக் கரிக்கிறீர்

ஆக...
அதி உயர் நவீன தமிழ்ச்சங்கமான
நம் இணையக் கோபுரமும் இன்று
நாற்றமெடுக்கும் நரகல் தொட்டிக்குள்

நாம் மாறாமல்...
நம் எண்ணக் கப்பல்
நங்கூரம் இட்டுக்கிடக்கும்
நரக நினைப்பை மாற்றாமல்
எந்த நவீனம் வந்து இங்கே
என்னவாகப் போகிறது?

கோட்டும் சூட்டும் அணிந்திருந்தாலும்
உள்ளத்தில் ஏற்றம் இல்லாதுபோனால்
நாற்றம்தானே வீசும்

நெஞ்சின் நேர்மைக்குக்
கருஞ்சாயம் பூசி
காணாதொழிக்கும் நண்பர்களே
இனியேனும் உங்கள்
நெஞ்ச வஞ்சங்களைக்
காலைக் கடனாகக்
கழித்துத் தொலையுங்கள்

அத்தனைக்கும் உச்சாணிக் கொம்பு
இவ்வுலகில் எழுத்துமட்டும்தான்
அதை இருட்டுக்குள் இருந்து
கிறுக்கிப் பார்க்காதீர்கள்

வெளிச்சத்தைத் தட்டி எழுப்ப
விரலிடுக்கில் எழுத்து நீர்க் குவளையோடு
நிற்கும் நீங்கள் முதலில்
வெளிச்சத்தை முத்தமிடுங்கள்

தாய்மொழி தமிழுக்கும்
தரமான இலக்கியத்துக்கும்முன்
இவையாவும் வெட்கக் கேடுகள்

அன்புடன் புகாரி

கேள்விகள்

என் இருத்தலின்
அகராதிகள்

எனக்கான
என் பயணங்கள்

என் மூச்சுக் காற்றுக்குச்
சூடு தரும் சக்திகள்

என்னை எனக்கே
அடையாளம் காட்டும்
கைகாட்டிகள்

என் வலிமையோடு
என் வலிமையைப்
போரிட வைக்கும்
தளபதிகள்

முகத்திரைகளற்ற
என் முகங்கள்

என் சொற்களில்
சுகப்படாத
என் தேடல்கள்

தனிமைக் குகைக்குள்
என்னைத்
தாகத்தோடு அடைத்து
மீண்டுவர பல
ஆண்டுகள் ஆக்கிவிடும்
பூதங்கள்

எனைச் சாகடிக்கும்
மரண நெருக்கடிகள்
சாகாமல் வாழவைக்கும்
உயிர்த் துளிகள்

என் வாழ்வுப் பாதையில்
என்னை எனக்குமுன்
நானே நிறுத்தி விசாரித்த
என் விசாரிப்புகளுக்கு
வெகுமதிகளாய்க்
கவிதைகளைத் தந்த
படைப்பாளிகள்

அன்புடன் புகாரி

உன் புகைப்படம்

நான்
அதிக நேரம் வாசிக்கும்
ஒரே கவிதை

புரிகிறது
புரியவில்லை
புரிகிறது
புரியவில்லை

உன் பார்வையை
வாசித்துக்கொண்டே
ஒரு பைத்தியம்

பார்த்துக்கொண்டே
இருக்கிறேன் நான்
சொல்லிக்கொண்டே
இருக்கிறாய் நீ
புகைப்படமா
இலக்கிய மேடையா

எப்போது
நிறுத்துவாய் என்று
உன்னிடம்
நீ கேட்டுச் சொல்

நீ சொல்லப்போகும்
சொல்லுக்குக் கட்டுப்படுமா
என் கண்கள் என்று
என்னிடம் நான்
கேட்கத் தேவையில்லை

கொஞ்சம் திரும்பு
இப்படி
என்னையே
பார்த்துக் கொண்டிருந்தால்
என் உயிர்
திரி கொளுத்தப் பட்ட
பட்டாசுபோல் பதறுகிறது

இன்றும்
அலுவலகத்துக்குத் தாமதம்
காலை உணவுக்கு விடுப்பு
காலுறை இல்லாமல் காலணி

நிலைத்த
விழிகளோடு நீ
நிலைதப்பிய
விழிகளோடு நான்

நேரம்போவதெங்கே
தெரிகிறது

உயிர் போவதைத்தான்
உணரமுடிகிறது

அன்புடன் புகாரி

இருள்

விளக்கை ஏற்றினேன்
இருள் சூழ்ந்தது

பதறிப்போய்
ஊதி அணைத்தேன்

ஓ...
என்னைப்
புணர்ந்துவிட்டது
இருள்

அன்புடன் புகாரி

காட்டியது ஒன்றுதான்

கணினி
ஜன்னல் திறந்தது
அவள்
விழி திறந்தாள்
உள்ளே
பேரண்டம்


அன்புடன் புகாரி

Friday, August 31, 2007

இருக்கிறது

எதுவுமில்லாததில்
எல்லாம் இருக்கிறது

எல்லாம் இருப்பதில்
எதுவுமே இல்லை

இருப்பதையும் இல்லாததையும்
ஒன்றுபோலவே காட்ட
கண்ணும் மனமும் மட்டுமின்றி
உயிரும்கூட அதிசயமாய்
ஒரே குரல் தந்தபோதும்
பறந்தோடும் காலம் வந்து
கரகர சுருதியில் வேறுகுரல் தருவது
வேடிக்கை வாடிக்கை

இருப்பதில் இல்லாததையும்
இல்லாததில் இருப்பதையும்
எடுத்துக் கொறித்தவண்ணம்
உயிர்ப் பறவையின் சிறகசைப்பு

கடந்த நிகழ் எதிர் காலங்களின்
நேர்கோட்டில் ஒரு நொடி வாழ்ந்தாலும்
வாழ்வை ருசிக்கும் புலன்கள்
அர்த்தமற்றவையாகிப்போகும்

இருக்கின்றதென்ற எண்ணத் துடிப்பில்
இல்லாமல் இருப்பதை
தவிப்போடு தேடும் வாழ்க்கையில்
எல்லாமும் அந்த நொடிப் பூரணம்

இப்படியான
பல்லாயிரம் பல்லாயிரம் நொடிப் பூரணங்களின்
தொகுப்பே வாழ்க்கை

உடைந்தழிந்து உடைந்தழிந்து
கழிந்துபோனாலும்
நீரில் நீந்தும் நீர்க் குமிழ்கள்
வாழ்வில் நீந்தும் வாழ்க்கைத் துளிகளாய்
நிஜமானவைதான்

அன்புடன் புகாரி

புறப்படு

புறப்படும்போது நதிகள் யாவும்
திசை தெரியாமலேயே புறப்படுகின்றன
எங்கே நகர்கிறோம் என்ற
இலக்கறியாமலேயே நகர்கின்றன
ஆயினும் அவையனைத்தும்
மிகச் சரியாகக்
கடலையே சேர்கின்றன

முடிவு பற்றிய பயத்தில்
பயணம் துறப்பது மரணம்

சறுக்கில்லா கவனமும்
பூட்டில்லா செவியும் போதும்
புறப்படும் கணங்கள் ஒவ்வொன்றும்
போகும் திசையைச்
சொல்ல்லிக்கொண்டே இருக்கும்

கேட்பதை அழிப்பது கூடாது
புறப்படவேண்டும்
புறப்பட்டுவிடவேண்டும்

திரும்பிப் பார்த்து
வருந்துவதில்லை நதி



அன்புடன் புகாரி

அழகே நீ வாழ்க!


செழுமைகள் கூத்தாடும்
செங்கமலத் தீவு
எழுகின்ற மழைபோல
எல்லாமும் வனப்பு

விழிமுற்றும் ஈர்ப்பது
விரிபட்டுச் சேலையோ
ஒளிநெற்றிப் புருவத்தின்
சங்கமச் சோலையோ

கரைமுட்டும் அலையாக
கண்ணுக்குள் மாங்கிளி
தரைதொட்ட முந்தானை
தளிர்விட்ட பூங்கொடி

விரல்பூட்டிக் கால்கட்டி
வீற்றிருக்கும் தீபமே
நிறைவான சுகம்பெற்று
நீடூழி வாழ்கவே

அன்புடன் புகாரி

எது கவிதை


உந்தும் உணர்வோடு
ஆழ் கடல் மூழ்கி
அடிமடி தொட்டு
அகள்விழிச் சல்லடையால்
அலசிப் பிடிக்க
அழகு முத்துக்களாய்க்
கவிதைகள்

மெல்லிய காற்றாய்
கடல் மேனி படர்ந்து
அலையலையாய் ஊர்ந்து
முகக்கரை மோதி முத்தமிட
நுரைப் பூக்களாய்க்
கவிதைகள்

அதிகாலைப் பொழுதில்
விலகியும்
விலகா உறக்கத்தில்
இதழ் விரிக்கும்
தளிர் உணர்வுகளில்
திட்டுத் திட்டாய்க்
கவிதைகள்

உறக்கம் கொண்ட கண்களில்
உறங்காத மன அலைச்சலில்
உடனிருக்கும் அத்தனையும்
உறங்கிப்போன இருள் பொழுதில்
மூச்சுவிட்டு மூச்சுவிட்டு அழைக்கும்
தத்துவார்த்தக் கவிதைகள்

கோபம் வரும்
கூடவே கவிதை வரும்
காதல் வரும்
முந்திக்கொண்டு கவிதை வரும்
சோகம் வரும்
அதைச் சொல்லவும்
கவிதை வரும்

எங்கில்லை கவிதை
எப்போதில்லை கவிதை
எதைத்தான் தழுவவில்லை
கவிதை

கவிதை எதுவெனக் காண
விழிசொடுக்கி
ஞானக்குதிரை விரட்டி
அண்டவெளி பறந்தால்
இதயத்தில் பூக்கிறது
எது கவிதை என்று ஒரு
கவிதை

அன்புடன் புகாரி

கோடுகள்


கோடுகள்
வாழ்க்கையில் ஏராளம்
அந்தக் கோட்டுக்குள்
நாடகம் அன்றாடம்

தாவிடும்
ஆசைகள் கூத்தாடும்
இன்பத் தவிப்புக்குள்
சிக்கியே நாளோடும்

மூடிய
மாங்கனி வீடாகும்
உள்ளே முத்தாக
வாழ்வது வண்டாகும்

கூடுகள்
இன்பத்தின் ஆதாரம்
அந்தக் கூட்டுக்குள்
அன்புதான் தேனூட்டும்

கட்டிய
காலுடன் நாட்டியம்
கண்கள் கட்டித்தான்
காட்சிகள் அரங்கேற்றம்

ஒட்டிய
தேவைகள் போராட்டம்
உயிரின் ஓலந்தான்
ஞானமாய் வேரோட்டும்

வெட்டிய
கீறலாய் ஏமாற்றம்
தொடரும் வெற்றெதிர்
பார்ப்போ ரணமாக்கும்

தொட்டது
தோற்பது சிறையாகும்
தொட்டுத் திறவாமல்
வெற்றியும் திசைமாறும்

இருட்டினில்
கண்களும் கூராகும்
துயரம் இடைமுட்ட
வாழ்வோ சீராகும்

கருத்தினில்
இழையா கனவுலகம்
வெற்று காற்றோடு
கரைந்து மணலாகும்

பருந்திடம்
மாட்டிய குஞ்சாக
நாளும் போராடித்
தவிக்கும் நன்னெஞ்சம்

விருந்தென
மடிவது படுமோசம்
வாழ்க்கை வெற்றிக்கு
மந்திரம் மனவீரம்

அன்புடன் புகாரி

என்னைப் பார்..


உனக்குச் சொன்னால்
புரிய மாட்டேனென்கிறது

கட்டுகளைக் கொஞ்சம்
கழற்றி வீசிவிட்டு
உள்ளத்தால் உள்ளத்தைத்
தொட்டுப் பார்

என்னை என்ன
செய்யச் சொல்கிறாய்?

நான் தேடும்
எல்லாமாகவும் நிறைந்திருக்கும்
உன்னை நான் ஆராதிக்காமல்
வேறென்ன செய்ய?

இந்த உறவு உரசல் உருவாக்கும்
வழக்கு நிமிடங்கள்கூட எனக்கு
எத்தனைத் தித்திப்பு தெரியுமா?

எனக்கொன்றும்
பிடிக்கவில்லையடீ
இந்த உலகத்தை
எல்லாம் தலைகீழ் நாடகம்

வேண்டாம்களை
வேண்டச் சொல்லியும்
வேண்டும்களைத்
தீண்டவிடாமல் விரட்டியும்
விளையாடும் விபரீதங்கள்
ஜீவனைக் கடித்து
நடைபிணமாய்த் துப்புகின்றன

கொஞ்சம் வாழலாமென்றால்
புழுத்துப்போன சமூகத் தடைகளெல்லாம்
உயிரை இழுத்துவைத்து
ஊசிகளல்லவா இறக்குகின்றன

பொய்யாய்ப் பெருங்கதையாய்
மெல்லத் தொலையாமல்
வேறென்ன நிகழும் இனியும்?

செத்ததும் கிடைக்கும்
சந்தோசம் என்று
சீக்கிரமாகவே புதைக்க
தினம் மல்யுத்தம் இங்கே

வாழும் வழிதேடி வந்தால்
ஏன் இந்த மௌனம்
உன்னிடம்?

காலங்காலமாய்
அணிவிக்கப் பட்ட
கண்ணுக்குத் தெரியாத
கண்ணாடிகளைக் கழற்றிவிட்டு
என்னைப் பார் அன்பே!

அன்புடன் புகாரி

பெண்


பெண்ணே உலகின் ஆதாரம்
அவளற்ற ஆண் வெறும்
தளமற்ற கட்டிடம்

உள்ளத் தவிப்புக்கு மருந்தும்
உயிரின் துடிப்புக்குச் சமாதானமும்
பெண்ணே இன்றி
பெறுவதுதான் எப்படி

கலையா கணினியா
இலக்கியமா இராணுவமா
நாட்டுத் தலைமையா
விண்வெளிப் புரட்சியா
எங்கே இல்லை அவள்

சொல்லுங்களேன்
உயிரைச் சுமக்கும் ஒரே உயிர்
உலகில் பெண்தானே?

துவண்ட மனதுக்கு
மடிதந்து தலைகோத
ஒரு பெண்ணற்றுப் போயின்
மனித இனம் மொத்தமும்
சுடுகாட்டுப் பிணங்கள்தானே

எல்லாச் சுகங்களும்
எங்கும் கிடந்தாலும்
ஒரு பெண்ணில்லா பூமியில்
சிறு பொழுதேனும் நகருமா

அந்தப் பூமியும் கூட
ஓர் அழகுப் பெண்ணல்லவா

நிலவா மலரா கடலா காற்றா
காண்பதெல்லாம் பெண்ணல்லவா

சுகங்களின் இருப்பிடம் அவள்
சொர்க்கத்தின் பொருளும்
அவளேதான்

ஓராயிரம் ஓட்டைகளும்
உருப்படாத துடுப்புமாய்
நடுக்கடலில் விடப்பட்ட
ஆசை ஓடங்கள்தானே
மனித மனங்கள்

ஒரு பெண்ணின் துணையின்றி
வாழ்வெனும் கரைசேர
வாய்க்குமோ கனவிலும்

அவளின் அன்பின்றி
ஆயுள் ரேகைக்கு
ஆயுள்தான் ஏது

அழப்பிறவா மனிதருண்டோ

ஓரெட்டில் அம்மா
ஈரெட்டில் தங்கை
மூவெட்டில் காதலி
நாலெட்டில் தாரம்
ஐயெட்டில் மகளென்று
சாவெட்டு வரும்வரை
நம் கண்ணீர் நிறுத்தி
அமைதியின் மடிகிடத்த
தம் கண்ணீர் பொழியும்
கருணை மேகங்களல்லவா
பெண்கள்

அறிவுரைக்கோ
ஆயிரம் நாவுகளுண்டு
ஆறுதலுக்கு
அவளன்றி வேறு வழியுண்டோ

பெரும்பாலும் பெண்கள்
உயிர்களைப் பிரசவிக்கும்போது
ஆண்கள்
அணுகுண்டுகளைத்தானே
பிரசவிக்கிறார்கள்

உயிர்களின் ஆக்கமெல்லாம்
பெண்ணே என்பதால்
அந்தத்
தெய்வமும் பெண்தானோ!

அன்புடன் புகாரி

கோபம் கொள்ளுதல் வேண்டும்


கோபம்
இறைவன் கொடுத்த வரம்

கோபப்படுதல் வேண்டும்
இல்லாவிட்டால்
கற்சிலைக்கும் மனிதருக்கும்
வித்தியாசமில்லை

கோபம் கொள்பவனைவிட
கோபப்பட வைப்பவனே
குற்றம் செய்கிறான்

கோபப்படுவதென்பது
தனக்குப் பிடிக்காதவற்றை
அழுத்தமாய்ச் சொல்வது

ஏன் கோபப்படுகிறாய் என்று
கேட்பதைவிட
ஏன் கோபப்படவைத்தோம் என்று
தன்னையே கேட்டுக்கொள்வது
நியாயம்

கோபம் இல்லா இதயத்தில்
நியாயம் இருக்க வாய்ப்பில்லை
கோபம் இல்லா கண்களில்
கருணை இருக்க வாய்ப்பில்லை
கோபம் இல்லா எதிர்பார்ப்பில்
அன்பிருக்க வாய்ப்பில்லை
கோபம் இல்லா உடலில்
வீரம் இருக்க வாய்ப்பில்லை
கோபம் இல்லா குணத்தில்
கற்பிருக்க வாய்ப்பில்லை

கோபத்தை வெளிக்காட்டுவதில்
அளவற்ற நாகரிகம் வேண்டும்
ஆனால்
கோபமற்ற பிணமாய்
ஒருநாளும் ஆகிவிடக்கூடாது

கோபம் வந்தவன்தான்
நேர்மையை நிரூபிக்கிறான்
கோபம் வந்தவன்தான்
போட்டியில் வெல்கிறான்
கோபம் வந்தவன்தான்
சுயமரியாதை உயர்த்துகிறான்
கோபம் வந்தவன்தான்
சுதந்திரக்கொடி ஏற்றுகிறான்

இரத்தம் கொதித்தால்தான்
வக்கிரங்கள் வெந்துமடியும்
அறிவு கொதித்தால்தான்
ஆராய்ச்சிகள் வெற்றிபெறும்
அன்பு கொதித்தால்தான்
உறவுகள் வலுப்படும்
உயிர் கொதித்தால்தான்
வாழ்க்கை உண்மையாகும்


அன்புடன் புகாரி

வாழப் பரிந்துரைக்கும் வண்ணக் கவிதைகள்


கவிதை

உச்சரிக்கும்
ஒவ்வொருமுறையுமே
உள்ளக் கிளைகளிலிருந்து
ஆயிரமாயிரம்
பட்டாம் பூச்சிகள்
சிறகடித்துப் பறக்கின்றன

உள்ளுக்குள் வாழும்
கல்லுக்கும்
சிறகுகள் முளைத்து
உயரே உயரே
எழுந்து எழுந்து பறக்கின்றது

எந்தப்
புண்ணியவான் சூட்டியது
இத்தனை அழகுப் பெயரை

கவிதை

உணர்வுகளை
மொழியாய்
மொழி பெயர்க்கும்
ஓர் அழியா கலை

மொழியின் உயிர்
உயிரின் மொழி

உயிர்த் துடிப்புகளை
அப்படி அப்படியே
காலன் தின்னாததாய்ச்
சேமித்து வைக்கும்
உயிர்ப் பெட்டகம்

தன்னுள் கிளர்ந்த
உணர்வுத் தீயை
துளியும் தணியாமல்
வெள்ளைத் தாள்களில்
பற்றியெரிய வைப்பதெப்படி
என்னும் கடுந்தவிப்பில்

கவிஞன்
தன்னையே செதுக்கி
உயிர்ப்பித்த தவம்

சத்திய கவிதைகளில்
சித்தம் நனையும்போது
இளமை துளிர்க்கின்றது
அந்த
உயிர் நீடிக்கின்றது

கவிதை

இயந்திரங்கள்
மனிதனை இயக்க

பழுதாகும் இன்றைய வாழ்வை
கருணையோடு அள்ளியணைத்துச்
சரிசெய்யும் மருத்துவம்

கற்பனையிலும்
வந்துபோகாத மனித இயல்பைக்
கர்ப்பமாய்ச் சுமந்து

மனித குலத்தின்மீது
மழையாய்ப் பொழிவிக்கும்
அக்கறை மேகம்

அதிநுட்ப அறிவியல் விருத்தி
தூரங்களையெல்லாம்
சுருக்கிச் சூறையாடியபோது

கூடவே சுருங்கிப்போன
நம் மனங்களையும்
வாழ்க்கைச் சுவைகளையும்
மலர்த்தித்தரும் சந்தனக் காற்று

இறுக்கத்தின் எண்ணங்களில்
தேங்கித் தேங்கி நிரம்பி வழியும்
விரக்திக் கேள்விகளால்
வெட்டுப்படும் பந்தங்களை
ஒட்டவைக்கும் உயிர்ப் பசை

பொருள்மட்டுமே தேடும்
சிறுமை வாழ்வை
ரசித்துச் சுவைத்து வாழும்
அருமை வாழ்வாக்கும்
அழகு தேவதை

நாளைகளில்
நம்பிக்கை இல்லாக்
கோழைகளாக்கும்
இந்த நூற்றாண்டுகளின்
பிரம்மாண்டங்களில்

நால்திசை நாடுகளும்
இடுப்பில்
அணுகுண்டுகளைத்
தூக்கி வைத்துக்கொண்டு
நிலாச் சோறு ஊட்ட

உலகம்
ஒரு நொடியில்
பொடியாகும் அபாயம்
நம் நிழலைக்
கிள்ளியெறிந்துவிட்டு
அந்த இடத்தை அபகரித்த
பெருமிதத்தில்
மந்தகாசிக்க

விழிகளில்
நம்பிக்கை ஒளியூட்டி
நடுங்கும் கரங்களைப்
பிடித்து நிறுத்தி
இயல்பு வாழ்க்கைக்குள்
இழுத்துச் செல்லும்
அன்புக் கரம்

கவிதை

அன்புடன் புகாரி

மௌன வரிகள்


தேனினைப் போலே
இனியதெது
தெளிந்த நல்லறிவுக்கு
ஏற்றதெது
மானிட மொழிகளில்
உயர்ந்ததெது
மௌனமே அல்லாது
வேறெதது

தூணிணைப் போலே
அமைதியினைத்
தூக்கி நிறுத்துவதப்
பேரழகு

வேணும் போதே
வாய்திறந்தால்
வேதனை ஒண்டாது
அன்புநெஞ்சே

அன்புடன் புகாரி

மௌனன்


அன்பு
கருணை
மன்னிக்கும் பண்பு
என்று
மனிதனிடம்
மனிதன் எதிர்பார்த்து
கிடைக்காததால்
இறைவனிடம் கேட்கிறான்

இறைவனோ
நிரந்தர மௌனத்தில்

இந்த மௌனத்தின் பொருளென்ன?

அன்புடன் புகாரி

இன்னொரு ஜென்மம்


பச்சையிலை மாநாட்டில்
பனிவிழும் பூக்காட்டில்
வேர்நரம்பும் விட்டுவிடாமல்
விதைகளுக்கு உள்ளேயும்
தேடினேன் தேடினேன்

ஏழு வண்ணமா என் வண்ணமா
என்ற கேள்வியழகோடு
அன்றலர்ந்த ரோஜா ஒன்று
என்னையா தேடுகின்றாய்
என்றது

இல்லை இல்லை ஓடிப்போ
உன் கவர்ச்சி வனப்பில்
எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

நீண்டு நிதானமாய்
நன்னீர் சுழித்தோடும்
நதியினுள் குதித்துத்
துழாவித் துழாவித்
தேடினேன் தேடினேன்

வெள்ளிச் செதிள் சிவக்க
விளையாடும் செங்கண் சிரிக்க
கெண்டை மீனொன்று
என்னையா தேடுகின்றாய்
என்றது

இல்லை இல்லை
ஓடிப்போ
உன் ஒய்யார ஆட்டத்தில்
எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

ஆழக் கடல் தொட்டு
அடிச்சென்று மூச்சடக்கி
அகண்ட கண் விரித்து
அதுவீசும் சுடரொளியில்
தேடினேன் தேடினேன்

குட்டிப் பவளப் பேழைகளாய்க்
கொட்டிக் கிடக்கும் சிப்பிகளின்
கதவு திறந்த முத்தொன்று
என்னையா தேடுகின்றாய்
என்றது

இல்லை இல்லை
ஓடிப்போ
உன் ஒளிரும் கர்வத்தில்
எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

மெத்து மெத்தென்ற
மேகக் கூட்டங்களை
முன்னும் பின்னுமாய்
இழுத்திழுத்து விலக்கித்
தேடினேன் தேடினேன்

வானத்தின் வெண்பொட்டு
வயதேறா குமரி மொட்டு
வட்டநிலா ஓடிவந்து
என்னையா தேடுகின்றாய்
என்றது

இல்லை இல்லை
ஓடிப்போ
உன் பகட்டுப் பேரழகில்
எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

அண்டப் பெருவெளியில்
அயராத ராட்டினத்தில்
இங்கும் அங்குமாய்
இமை கழித்த விழிகளோடு
தேடினேன் தேடினேன்

சில்லென்ற மேனியதிரச்
சுற்றிவரும் தித்திப்பாக
செய்வாய்க் கோள் வந்து
என்னையா தேடுகின்றாய்
என்றது

இல்லை இல்லை
ஓடிப்போ
உன் புதிரான விளையாட்டில்
எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

தேடினேன் தேடினேன்
அண்டவெளி எங்கிலும்
அக்கினியாய்த் தேடினேன்
அகப்படா நிலையிலென்
ஆழுயிர்த் துடித்தே வாடினேன்

அத்தனைக் காற்றும்
ஓய்ந்தே போனதோ
அத்தனை ஓசையும்
ஒடுங்கியே போனதோ
அத்தனை ஒளியும்
ஒழிந்தே போனதோ

நம்பிக்கை யாவும்
நஞ்சுக்குழி விழுந்து
சுட்ட பிணங்களாகின

தேடித் தவித்த விழிகள்
இமைச் சுமை தாண்டி
இதயச் சுமை தாண்டி
உயிர்ச் சுமையாகி
உதிர்ந்து உடைந்தன

தேடும் தவம் துறந்து
தேடா வரம் பெற்று
ஊனமுற்ற நாட்களுக்குள்
உயிர்ப்பளு ஏற்றிக்கொண்டு
விந்தி விந்தி நடக்கையிலே

கிழிந்த விழிகளை
மூடிக்கிடக்கும் என்
நைந்த இமைகளின் மேல்
ஒரு துளி உப்புக் கண்ணீர்

அடடா
என் கண்களுக்குள்
நீர் வற்றித்தான்
நெடுநாட்கள்
நகர்ந்துவிட்டனவே

இதென்ன இது
உள்ளிருந்து வாராமல்
வெளியிலிருந்து விழிநீர்

அதுவும்
உள்விழி நீரின்
அதே அடர்வு உப்போடு

யார் உகுக்கும்
கருணை நீர் இது

ஒரு
பூர்வ ஜென்ம வாசனை
என் நாசிக் குகைக்குள்
நர்த்தனம் ஆடுகிறது

நான்
பிறந்த போதே இழந்துவிட்ட
என் பிறப்பு வாசனையல்லவா
இது

ஓர்
இளஞ்சூட்டு ஈரம்
என் இதழ்தொட்டு மூடுகிறது

அப்பப்பா
காயங்கள் காயங்களோடு
ரணங்கள் ரணங்களோடு
ரகசிய ஒத்தடங்கள்
படபடப்பாய்ச்
சிறகடிக்கின்றன

காதுகளில் ஒரு கானம்
இதுவரை இசைக்கப்படாத
எனக்கான தாலாட்டாகத்
தழுவுகிறது

உணர்வுக்குள்
உணர்வுகள் உட்கார்ந்து
உரையாடுகின்றன

உயிருக்குள்
உயிர்கள் எழுந்து
ஓடிவிளையாடுகின்றன

நானென்ன
கனவு காண்கிறேனா

ஏக்க விழிகளுக்குக் கிடைக்கும்
செங்கோலும் சிம்மாசனமும்
கனவுகள்தானே

படக்கென
இமைகள் வெடிக்கிறேன்
நான்


நீதான் நீதான்
அது நீயேதான் என்கிறேன்

உயிருக்குள்
மௌனித்துக்கிடந்த
உள்ளுயிர்க் குரலில்

ம்ம்ம்..
நான் தேடியபோதெல்லாம்
வராமல்
தேடாதபோது ஏன் வந்தாய்
என்றேன்

'தேடிக்கொண்டிருந்தேன்'
என்ற பதில் எனக்குள்
இன்னொரு ஜென்மத்தைப்
பொசுக்கென்று விதைத்தது

(மனதுக்கே ஜென்மங்கள் உடலுக்கல்ல)


அன்புடன் புகாரி

மௌனமே உனை நான் நேசிக்கிறேன்


மௌனமே....
உனை நான் நேசிக்கிறேன்
உன் உதடுகளுக்குள்
ஒளிந்துகொள்ள யாசிக்கிறேன்

மௌனம் கலையக் கலைய
வாழ்க்கை கலைந்து போகிறது

மௌனம் கலையக் கலைய
உணர்வுகள் உதிர்ந்து போகின்றன

மௌனம் கலையக் கலைய
அர்த்தமான அத்தனையும்
அனர்த்தமாகிச் சிதைகின்றன

மௌனம் கலையக் கலைய
உயரே உயர்ந்த மதிப்பீடுகள்
மெல்ல மெல்லச் சரிகின்றன

மௌனம் கலையக் கலைய
உதடுகளை உதிர்த்துவிட்டு
விழிகள் ஊமைகளாகின்றன

முத்தத்திலும்
நான்கு உதடுகளும்
ஒரு யுத்தத்தில் சிக்கிக்கொள்ளும்
மௌன முத்தமே மிக அழுத்தமானது

மௌன ரதங்களில்தான்
காதல் கற்பிழக்காமல்
உலா விருகிறது

மௌன முறங்களால்தான்
துயரம் துரத்தப்படுகிறது

மௌனச் சுவர்களால்தான்
பல யுத்தங்கள்
துவங்கப் படாமலே இருக்கின்றன

மௌன மூலிகைதான்
மனக்காயங்களின் மருந்தாகிறது

மௌனத் தழுவல்களில்தான்
அன்பு விரிந்து பரவுகிறது

மௌன மத்தியில்தான்
மனசாட்சியே விழித்திருக்கிறது

மௌனமே
உனை நான் நேசிக்கிறேன்
உன் உதடுகளுக்குள்
ஒளிந்துகொள்ள யாசிக்கிறேன்


அன்புடன் புகாரி