Friday, August 31, 2007

வாழப் பரிந்துரைக்கும் வண்ணக் கவிதைகள்


கவிதை

உச்சரிக்கும்
ஒவ்வொருமுறையுமே
உள்ளக் கிளைகளிலிருந்து
ஆயிரமாயிரம்
பட்டாம் பூச்சிகள்
சிறகடித்துப் பறக்கின்றன

உள்ளுக்குள் வாழும்
கல்லுக்கும்
சிறகுகள் முளைத்து
உயரே உயரே
எழுந்து எழுந்து பறக்கின்றது

எந்தப்
புண்ணியவான் சூட்டியது
இத்தனை அழகுப் பெயரை

கவிதை

உணர்வுகளை
மொழியாய்
மொழி பெயர்க்கும்
ஓர் அழியா கலை

மொழியின் உயிர்
உயிரின் மொழி

உயிர்த் துடிப்புகளை
அப்படி அப்படியே
காலன் தின்னாததாய்ச்
சேமித்து வைக்கும்
உயிர்ப் பெட்டகம்

தன்னுள் கிளர்ந்த
உணர்வுத் தீயை
துளியும் தணியாமல்
வெள்ளைத் தாள்களில்
பற்றியெரிய வைப்பதெப்படி
என்னும் கடுந்தவிப்பில்

கவிஞன்
தன்னையே செதுக்கி
உயிர்ப்பித்த தவம்

சத்திய கவிதைகளில்
சித்தம் நனையும்போது
இளமை துளிர்க்கின்றது
அந்த
உயிர் நீடிக்கின்றது

கவிதை

இயந்திரங்கள்
மனிதனை இயக்க

பழுதாகும் இன்றைய வாழ்வை
கருணையோடு அள்ளியணைத்துச்
சரிசெய்யும் மருத்துவம்

கற்பனையிலும்
வந்துபோகாத மனித இயல்பைக்
கர்ப்பமாய்ச் சுமந்து

மனித குலத்தின்மீது
மழையாய்ப் பொழிவிக்கும்
அக்கறை மேகம்

அதிநுட்ப அறிவியல் விருத்தி
தூரங்களையெல்லாம்
சுருக்கிச் சூறையாடியபோது

கூடவே சுருங்கிப்போன
நம் மனங்களையும்
வாழ்க்கைச் சுவைகளையும்
மலர்த்தித்தரும் சந்தனக் காற்று

இறுக்கத்தின் எண்ணங்களில்
தேங்கித் தேங்கி நிரம்பி வழியும்
விரக்திக் கேள்விகளால்
வெட்டுப்படும் பந்தங்களை
ஒட்டவைக்கும் உயிர்ப் பசை

பொருள்மட்டுமே தேடும்
சிறுமை வாழ்வை
ரசித்துச் சுவைத்து வாழும்
அருமை வாழ்வாக்கும்
அழகு தேவதை

நாளைகளில்
நம்பிக்கை இல்லாக்
கோழைகளாக்கும்
இந்த நூற்றாண்டுகளின்
பிரம்மாண்டங்களில்

நால்திசை நாடுகளும்
இடுப்பில்
அணுகுண்டுகளைத்
தூக்கி வைத்துக்கொண்டு
நிலாச் சோறு ஊட்ட

உலகம்
ஒரு நொடியில்
பொடியாகும் அபாயம்
நம் நிழலைக்
கிள்ளியெறிந்துவிட்டு
அந்த இடத்தை அபகரித்த
பெருமிதத்தில்
மந்தகாசிக்க

விழிகளில்
நம்பிக்கை ஒளியூட்டி
நடுங்கும் கரங்களைப்
பிடித்து நிறுத்தி
இயல்பு வாழ்க்கைக்குள்
இழுத்துச் செல்லும்
அன்புக் கரம்

கவிதை

அன்புடன் புகாரி

No comments: