Friday, August 31, 2007

மௌனமே உனை நான் நேசிக்கிறேன்


மௌனமே....
உனை நான் நேசிக்கிறேன்
உன் உதடுகளுக்குள்
ஒளிந்துகொள்ள யாசிக்கிறேன்

மௌனம் கலையக் கலைய
வாழ்க்கை கலைந்து போகிறது

மௌனம் கலையக் கலைய
உணர்வுகள் உதிர்ந்து போகின்றன

மௌனம் கலையக் கலைய
அர்த்தமான அத்தனையும்
அனர்த்தமாகிச் சிதைகின்றன

மௌனம் கலையக் கலைய
உயரே உயர்ந்த மதிப்பீடுகள்
மெல்ல மெல்லச் சரிகின்றன

மௌனம் கலையக் கலைய
உதடுகளை உதிர்த்துவிட்டு
விழிகள் ஊமைகளாகின்றன

முத்தத்திலும்
நான்கு உதடுகளும்
ஒரு யுத்தத்தில் சிக்கிக்கொள்ளும்
மௌன முத்தமே மிக அழுத்தமானது

மௌன ரதங்களில்தான்
காதல் கற்பிழக்காமல்
உலா விருகிறது

மௌன முறங்களால்தான்
துயரம் துரத்தப்படுகிறது

மௌனச் சுவர்களால்தான்
பல யுத்தங்கள்
துவங்கப் படாமலே இருக்கின்றன

மௌன மூலிகைதான்
மனக்காயங்களின் மருந்தாகிறது

மௌனத் தழுவல்களில்தான்
அன்பு விரிந்து பரவுகிறது

மௌன மத்தியில்தான்
மனசாட்சியே விழித்திருக்கிறது

மௌனமே
உனை நான் நேசிக்கிறேன்
உன் உதடுகளுக்குள்
ஒளிந்துகொள்ள யாசிக்கிறேன்


அன்புடன் புகாரி

No comments: