என்
நெஞ்சக் கூட்டுக்குள்
படபடவென
சிறகடித்துத் துடிக்கும் கிளிகள்
என்ன சொல்லித்
துடிக்கின்றன என்று
அன்பே
உன்னிடம் நான்
சொல்லிவிடவா
உன்
கருவண்டுக் கண்களுக்குள்
அவ்வப்போது
ஒரு
பனிபடர்ந்தமுகம்
அரும்பு விட்டுப்
பூப்பதைப் பார்க்கிறேன்.
கேட்டுவிடவா
அது
என் முகம்தானே என்று.
உன்
கன்னங்களில் சிவந்து
கழுத்துவரை கரைந்து விழும்
வெட்க நிலாக்களில்
ஒரு
தெளிவில்லாத
முகவரி பார்க்கிறேன்.
கேட்டுவிடவா
அது
என் முகவரிதானே என்று
உன்
மாபெரும் மைவிழிகள்
என்
மனவெளியைப் படுத்தும் பாடு
அப்பப்பா
சொல்லவொண்ணாத் தவிப்பு
அன்பே
உன் புன்னகைகள்
என் கனவுகளில் பொழியும்
பொன்மழையைச் சொன்னால்.
கேட்டு மகிழ்வாயா
அன்பே
ஜென்மங்களில்
நம்பிக்கை உண்டா உனக்கு
எனக்குக் கிடையாது
இருப்பினும்
அது
இருக்க வேண்டுமென
இன்று ஆசைப் படுகிறேன்
என்
வார்த்தைக் குஞ்சுகளை
இன்று நான்
அடைத்து வைத்தாலும்
அவற்றை
நம்
மறு ஜென்மத்திலாவது
ஆசையாய்த்
திறந்து விடலாமல்லவா
அன்புடன்..புகாரி
Saturday, September 1, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment